வீதி விபத்துகளில் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் ஒரே நாளில் பரிதாபச் சாவு!

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நேற்று (30) மாத்திரம் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா – நீர்கொழும்பில் பாதசாரிகள் இருவரை லொறி மோதியதில் இருவர் சாவடைந்துள்ளனர். மூன்று வயது ஆண் குழந்தையும், அவரின் 29 வயதான தந்தையுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கண்டி – கம்பளையில் பஸ் மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் சாவடைந்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளை அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குருநாகல் – குளியாப்பிட்டியில் காரும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டோ சாரதி சாவடைந்துள்ளார். 42 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் – ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வான் மோதியதில் பாதசாரி ஒருவர் சாவடைந்துள்ளார். 68 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – வெள்ளவத்தையில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சாவடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியில் வான் விபத்துக்குள்ளானதில் 76 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.

களுத்துறை – பாணந்துறையில் ஓட்டோ கவிழ்ந்ததில் இருவர் சாவடைந்துள்ளனர். 33 வயதான ஓட்டோ சாரதியும், அதில் பயணித்த 41 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை – வெல்லவாயவில் ஹயஸ் வான் மோதியதில் பாதசாரி ஒருவர் சாவடைந்துள்ளார். 72 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.