யாழ். பொலிஸார் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது 21 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள். பொலிஸ் நிலையத்தில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட உத்தியோகத்தர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

மன்னார் மாவட்டத்தில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குக் கொரோனா அறிகுறிகளுடன் சென்றவர்கள். ஒருவர் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றவர்.

மல்லாவி வைத்தியசாலைக்குச் சென்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.