‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு மிகவும் அவசியம் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் இலங்கையின் அரசமைப்புக்கு முரணானது என்று 19 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான தீர்ப்பை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்குச் சமர்ப்பித்திருந்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில பிரிவுகள் இலங்கை அரசமைப்புடன் முரண்படுகின்றன என்றும் உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புடன் முரண்படும் பகுதிகளைச் சீர்திருத்த முடியுமான விதம் தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 62 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உட்பட உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியன்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் மூலம் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.