யாழில் தீக்காயங்களுக்குள்ளான கல்வித் திணைக்களப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

குப்பை கொளுத்த மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் மீது எண்ணெய் பறந்தமையால் தீக்காயங்களுக்குள்ளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நல்லூர் வடக்கைச் சேர்ந்த சுஜீபன் தர்சிகா (வயது 28) என்ற இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.

கல்வித் திணைக்களத்தின் பணியாளரான குறித்த தாய், கடந்த 20ஆம் திகதி வீட்டில் கூட்டிய குப்பையைத் தீ மூட்டியுள்ளார். பெரிய கானில் இருந்த மண்ணெண்ணெய்யை எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் ஊற்ற முயன்றுள்ளார். இதன்போது கை சறுக்கியதால் அதிக மண்ணெண்ணெய் பறந்தது. அணிந்திருந்த ஆடையிலும் மண்ணெண்ணெய் சிந்தியமையால் ஆடையில் தீ பரவியுள்ளது.

இதையடுத்து எழுப்பிய அவலக் குரலையடுத்து வீட்டார் உடனடியாகத் தீயை அணைத்து தீக்காயங்களுக்குள்ளான அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். இருந்தபோதும் 4 நாள்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.

இவரது மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.