12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? : சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை பரவல் காரணமாக ஏற்கனவே சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்துசெய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து அறிவித்து வருகின்றன. அதன்படி, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

சட்டீஸ்கரில் 12ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பீகார், கேரள மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்திமுடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்காமல் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்வதா என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ம் வகுப்பு தேர்வு பற்றி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார். தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்படும் என்றும், அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கிறார். மேலும் காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி உட்பட 13 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் வழிமுறைகளை முடிவுசெய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் உட்பட 12 பேர் அடங்கிய இந்த குழுவினர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 10 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.