காவேரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதா? கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரான வகையிலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்ததற்கு தமிழ்நாட்டின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்பாசனத் திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. கர்நாடக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

வெள்ளப் பெருக்கின்போது, காவேரி, கொள்ளிடம் ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பிவிட ஏதுவாக நீண்ட நாள் கனவுத் திட்டமான காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டு 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்று.

இந்தச் சூழலில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்பதால் அந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு ஒப்புதல் தரவில்லை என்பதற்காக, வேண்டுமென்றே தங்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் நீர்பானத் திட்டங்களுக்குத் தடை கேட்டு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது நியாமற்ற செயல். சென்னை மாகாணத்துக்கும், மைசூர் மாகாணத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி மைசூர் மாகாண அரசு காவேரி நீரைத் தடுக்கும் வகையில் அணைகளைக் கட்டக்கூடாது என்பதுதான்.

இதற்கு காரணம், காவேரி ஆற்றின் மேல்படுகையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் அணைகளைக் கட்டினால், காவேரி ஆற்றின் கீழ்ப்படுக்கையில் அமைந்துள்ள தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் தடைபடும் என்பதால்தான் தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் அணைகைக் கட்டக்கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையும், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் மீறி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும்போது அதனை தமிழ்நாடு எதிர்கிறது. இதற்கு காரணம், புதிய அணைகளைக் கட்டும்போது, தமிழ்நாட்டுக்கு வருகின்ற நீரின் அளவு வெகுவாகக் குறையும்.

அதேசமயத்தில், காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காணமாக, தமிழ்நாட்டில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்படும தவிர, கர்நாடகாவிற்கு எந்த பாதகமும் ஏற்படாது. எனவே, தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பது பொறாமையின் வெளிப்பாடு. இதன்மூலம், உபரி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்படக்கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

எனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இதில் உடனடியாக கவனம் செலுத்தி காவேரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் – சரபங்கா நீரேற்றுத் திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு தடை கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.