6 – 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து அமைச்சர் பதில்!

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இது தொடர்பாக பல கருத்துகளை பரிமாறி கொண்டோம். பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளின் கருத்துகளையும் கேட்டு உள்ளோம். முதலில் 6,7,8 வகுப்புகளை ஆரம்பிக்கலாமா? அல்லது 1 முதல் 8-ம் வகுப்பு ஆரம்பிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.

கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கேரளாவை ஒட்டி இருப்பதால் அதற்கேற்ற முடிவுகள் எட்டப்படும். அங்கிருக்கும் சூழ்நிலைகள் அவர்களது எதிர்பார்ப்பு குறித்து அனைத்து கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. நாளை முதல்வரிடம் முழு ரிப்போர்ட்டையும் கொடுக்க உள்ளோம். எந்த வகுப்பு பள்ளிகளை திறக்கலாம் என்று அவரும் வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வார். மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.