சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை : தண்ணீர் வடியாததால் மக்கள் வேதனை

சென்னையில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் மழை பெய்தது. அதேபோல இன்று அதி காலை முதல் அவ்வப்போது ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

கோயம்பேடு சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 15 நிமிடத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதேபோல், அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதிகளில் விட்டுவிட்டு மழை தூறியது. இரவு நேரத்தில் நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கோடம்பாக்கம், அண்ணாசாலை என மாநகர் பகுதிகளில் மழை பெய்தது. முகப்பேர், கொரட்டூர், ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்நிலையில், ஐயப்பன்தாங்கல், கொளுத்துவாச்சேரி, பரணிபுத்தூர் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டிலிருக்கும் பாத்திரங்களை கொண்டு நீரை வெளியேற்றி வரும் மக்கள், தேங்கியிருக்கும் தண்ணீரால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜோதிநகர் கக்கன்ஜி தெரு, காந்தி தெரு, கொளுத்தூவான் சேரி, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆட்டோ, கார், பைக், போன்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கி கொண்ட காரணத்தால் அதனை எடுக்க முடியாமலும் வாகனங்கள் பழுது அடைந்து வீட்டிலேயே நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கூடம் செல்பவர்கள் மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

முன்னதாக, மௌலிவாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்களால் மாங்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த குன்றத்தூர் மாவட்ட சேர்மன் படப்பை சேர்மன் ஜேசிபி இயந்திரம் கொண்டு தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் பரணிபுத்தூர் ஜோதி நகர் பகுதியில் முட்டி அளவு தண்ணீரில் நடந்து சென்று வீடூ வீடாக நேரில் ஆய்வு செய்து விரைவில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.