ஜனாதிபதி பதவி விலகவேண்டும் தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை.

தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டை தொடர்ந்து அராஜக நிலைக்கு கொண்டு செல்லாமல் எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவேண்டும்.

அவ்வாறு விலகாவிட்டால், நாட்டில் இருக்கும் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்துவந்து 7ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம்.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை மற்றும் அராஜக நிலைமையை சீர் செய்வதற்கு உடனடியாக செயற்படுமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக கைச்சாத்திட்டு அனுப்பிய கடிதத்துக்கு ஆரோக்கியமான பதிலொன்றை அரசாங்கங்கம் தெரிவிக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம்.

அத்துடன் பெளத்த மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்துக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதாக ருவன்வெலிசாய புனித பூமியிலும் ஸ்ரீமஹா புத்த பெருமான் நிலைகொண்டுள்ள புனிதபூமியிலும் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு ஜனாதிபதி மக்களை ஏமாற்றி இருக்கின்றார் என்பது அவர், மஹாநாயக்க தேரர்களின் கடித்தத்துக்கு பதில் அளிக்காததன் மூலம் தெரியவருகின்றது.

ஜனாதிபதி மீது நம்பிக்கைவைத்து பெளத்த தேரர்கள் உட்பட 69இலட்சம் பெரும்பான்மை மக்கள் ஜனாதிபதியை தெரிவுசெய்து கொண்ட போதும் தற்போது அந்த மக்களுக்கு ஜனாதிபதி தொடர்பாக கடுகளவேனும் நம்பிக்கை இல்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவை தொடர்ந்தும் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள தேரர்கள் உட்பட நாட்டு மக்கள் தயார் இல்லை.

மேலும் நாடு பாரிய அழிவொன்றை காணும் நிலையில் இருக்கும்போது, அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் 22மில்லியன் மக்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர்களின் சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டியது தேரர்களின் பிரதான கடமை என்பதாலே இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.