ஏடிஎம்மில் தினமும் லட்சத்தில் டெபாசிட்.. சுற்றி வளைத்த போலீசார்

ஆயிரம் ரூபாய் கமிஷனுக்காக ஒரு வருடமாக சென்னையின் பல்வேறு வங்கி ஏ.டி.எம்.லிருந்து லட்சக்கணக்கில் பணம் அனுப்பி வந்த நபரை பிடித்து அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்பாக்கம் அழகப்பா சாலையிலுள்ள SBI ஏ.டி.எம்.,லிருந்து தினந்தோறும் ஒரு நபர் 2 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாய் வரை பணம் போடுவதாக மும்பையிலுள்ள SBI வங்கி தலைமை அலுவலகம் கீழ்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சரியாக 6 மணிக்கு தினந்தோறும் பணம் அனுப்பி வந்த நபர் ஒரே நபர் தான் என கீழ்பாக்கம் காவல் நிலையத்துக்கு SBI வங்கி தலைமை அலுவலகம் தகவல் அளித்தது.

இந்த தகவலையடுத்து, நேற்று காலை 5.50 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று காத்திருந்த போலீசார் சரியாக 6 மணிக்கு ரூ.2.10 லட்சம் பணம் போட்டு வெளிவந்த அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சாயின்ஷா (29) என்பதும், அவர் Rapido பைக் சர்வீஸில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவ்வளவு பணம் ஏது என போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,

பாரிமுனையில் பர்வீஸ் என்பவர் தினமும் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, அவர் சொல்லும் வங்கி எண்ணுக்கு பணத்தை அனுப்பினால், ஒரு லட்சத்துக்கு, 1000 ரூபாய் கமிஷன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஒரு வருடமாக அவர் சொல்லும் வங்கிக்கு பணம் செலுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார், சாயின்ஷாவை அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டு, பர்வீஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.