யாழ். கோப்பாயில் ஹெரோய்னை ஊசி மூலம் பாவிக்க முயன்ற இரு இளைஞர்கள் கைது!

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்க வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில், ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோய்னைச் செலுத்த முற்பட்ட இளைஞர்கள் இருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பகுதி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்படி வீட்டை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.

வீட்டு அறையினுள் உயிர்கொல்லி ஹெரோய்னை நுகர்வதற்கு தயாராக இருந்த 30 மற்றும் 34 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குடும்பத்தவர்கள் வீட்டில் இருக்கத்தக்கதாகவே போதைப் பாவனைக்கு முயன்றவேளை கைதாகியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரி என்று சந்தேகிப்பதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

80 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் மற்றும் 2 கிராம் உயிர் கொல்லி ஐஸ் போதைப்பொருள்களும், 10 இன்சுலின் ஊசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைச் சூடாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

உயிர்கொல்லி ஹெரோய்ன் நுகர்வதற்கு முன் தேசிக்காய் சாறு ஏற்றுவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த தேசிக்காய்களும் மீட்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.