முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்த விக்ணேஸ்வரனுக்கு எந்த அருகதையும் இல்லை : வேலாயுதம் கணேஸ்வரன்

ஆயுதக் குழுக்களுக்கும் அரசாங்க கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் பரப்புரை செய்து வருகிறார். உண்மையில் இது மிக மன வருத்தமான விடயம். ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவர்கள். அவரது கட்சியில் இப்போதும் 4 முன்னால் ஆயுதக் குழுக்களை சேர்ந்தோர் அவரது அணியில் இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் கூட நேரடியாக போராட்டத்தில் ஈடுபடாவிடினும் , அவரது கணவரின் பெயரை பாவித்தே அரசியல் செய்து வருகிறார். கணவர் குறித்து பேசாவிடில் அவருக்கு என அரசியல் செய்ய காரணங்களே இல்லை. சுரேஸ் பிரேமசந்திரன் ஆயுதம் ஏந்திய ஒருவர். ஶ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் ஆயுதக் குழுக்களோடு இருந்தவர்கள்தான் என யாழ்.ஊடக அமையத்தில் இன்று (6) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் , விக்ணேஸ்வரனது பேச்சை பார்க்கும் போது அவர்களது கூட்டணிக்குள் முரண்பாடு தொடங்கியிருப்பதாக உணர முடிகிறது. 4 முன்னாள் போராளி குழுக்களை தன்னோடு வைத்துக் கொண்டு விக்ணேஸ்வரன் இப்படி ஏன் சொல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

திம்பு பேச்சு வார்த்தையின் ஊடாகத்தான் இந்த மாகாண சபை எமக்கு கிடைத்தது. அதற்கு இந்த ஆயுதக் குழுக்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அதுவும் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை. இப்படி இருக்கும் போது இவர் எப்படி இப்படியான கருத்தை கூற முடியும்?

சுமந்திரன் , தான் ஆயுத போராட்டத்தை ஆதரிக்கவில்லை என அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த போராளிகள் அனைவரும் சேர்ந்து இந்த மாகாண சபையை நடத்தி முன்னேற்றியிருக்க வேண்டும். ஆனால் இப்படி பேசும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து 5 வருடங்கள் மாகாண சபையில் இருந்து எதையுமே செய்யாமல் இருந்தார்கள். இவர்களுக்கான கதிரைகள் போராளிகளால் பெற்றுக் கொடுக்கபட்ட ஒன்று என்பதை மறந்து போனார்கள். இவர்கள் அரசியல்வாதிகளாக நுழைந்து அனைத்தையும் கவிழ்த்து கொட்டியதுதான் மீதமானது.

முதலமைச்சருக்கு நான் ஒரு சவாலை விடுகிறேன் , கடந்த மாகாண சபை செயல்பட்ட 5 வருட காலத்தில் இவர் செய்தது என்ன என பகிரங்கமாக சொல்ல வேண்டும்? ஆளுனர் சந்திரசிறி அவர்கள் இருக்கும் போதுதான் இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்று எமது கல்வி தரம் 6வது இடத்தில் இருந்தது. இவர் வந்த பின் கல்வி நிலை , கடைசி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அப்படியானால் இவர் இதுவரை சாதித்தது என்ன? பகல் 12 மணிக்கு நித்திரைக்கு போய் மாலை 4 மணிக்கு எழுந்ததை விட இவர் வேறென்ன சாதித்துள்ளார்? இதைத் தவிர எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அதோடு இப்படியெல்லாம் முன்னாள் போராளிகள் குறித்து பேச இவருக்கு எந்த அருகதையும் இல்லை. மக்கள் இவரை நிராகரிக்க வேண்டும் .

அதற்கு காரணம் 1983ம் ஆண்டு நாங்கள் ஆயுதம் ஏந்திய போது , இவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களது தேர்தல் மேடைகளில் பேசி வந்தவர். அதன் பிரதிபலனாகவே இவருக்கு நீதிபதியாக முடிந்தது. 1983ல் நானும் ஒரு போராளியாக இருந்தேன். அப்படியான காலத்தில் மௌனமாக இருந்தவர்தான் இவர். அதன்பின் மக்கள் கொத்து கொத்தாக அழியும் போது கூட ஒரு அறிக்கை விடாத ஒருவர் விக்ணேஸ்வரன் . இவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா?

இவரைப் பற்றி பொது மக்களான உங்களுக்கு பெரிதாக தெரியாது. எனக்கு சிறையில் உள்ள அரசியல் கைதிகளோடு அதிக தொடர்பு உண்டு. அவர்களுக்காக நான் பல விடயங்களை செய்து வருகிறேன். தொடர்பிலிருக்கிறேன். அவர்கள் என்னிடம் பேசும் போது நீதிமன்றத்தில் தங்களது விசாரணை நடக்கும் போது ஒரு சிங்கள நீதிபதி வர வேண்டும் , விக்ணேஸ்வரன் மட்டும் எமது வழக்கை விசாரிக்க வரக் கூடாது என கடவுளை வேண்டுவதாக சொல்வார்கள். இவர் வந்தால் அதிக தண்டனைகளை கொடுப்பதாக பயப்படுவார்கள். இவை தடுப்பில் உள்ள அரசியல் கைதிகள் என்னிடம் நேரடியாகவே சொன்னவை.

2013ம் ஆண்டு கனடாவுக்கு வீசா மட்டும் கிடைத்திருந்தால் நான் அங்கு போயிருப்பேன் , வீசா கிடைக்காததால்தான் இங்கே வந்தேன் என அரசியல் பிரவேசம் குறித்து பகிரங்கமாகவே அவரே தெரிவித்திருந்தார். இவர் முதலமைச்சரான 4வது வருடம் மாகாணசபைக்குள் பெரும் பிரச்சனை உருவானது. அந்நேரத்தில் இவர் ஒரு சரியான மனிதராக இருந்தால் இங்கு இருப்போர் வேலை செய்ய விடுகிறார்கள் இல்லை என பதவியை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் முழுமையாக 5 வருடமும் கதிரை மோகத்தால் அப்படியே இருந்தார். அவரது பதவிக் காலமான 5 வருடத்தில் வடக்குக்கு அவர் செய்தது எதுவுமே இல்லை. அவர் செய்தவை என்ன என முதலமைச்சர் பதிலளிக்க முன்வருவாரா என சவால் விடுகிறேன்.

நெல்சிப் என ஒரு புரொஜெக்ட் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கட்டாத கட்டிடங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு கட்டிடத்தைக் கூட கட்டவில்லை. 2013ம் ஆண்டு இதற்காக இவர் ஒரு விசாரணை கமிசனை நியமித்தார். இது 2020ம் ஆண்டான இதுவரை அந்த விசாரணை குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. இவர் இவரது பதவி காலத்தில் எந்த முடிவையும் எடுக்கவே இல்லை. ஒரு விசாரணை நடத்தி அறிக்கை வெளியாக எவ்வளவு காலம் எடுக்கும்? ஏன் அதை செய்யவில்லை? எனக் கேட்கிறேன்.

அடுத்தது இரணமடு ஊழல் விடயம் , அதுவும் இவரது காலத்தில்தான் நடந்தது. இன்னொன்று சுண்ணாகத்தில் நீரில் எண்ணை கலந்த விடயம் . பெயருக்கு ஒரு விசாரணை கமிசனை அமைத்து மக்களை ஏமாற்றினார்கள். அதிலிருந்தவர்களின் பெயருக்கு முன்னால் திரு. கலாநிதி என பெயர் போட்டுக் கொண்டு முழுக்க முழுக்க முழுக்க பொய் சொன்னார்கள். பொய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். இந்த சுண்ணாக எண்ணை பிரச்சனைக்காக முன்னாள் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லாது போனால் இதை விசாரித்தோரது பட்டங்கள் பறிக்கப்பட வேண்டும். அந்த விசாரணைக்காக அவர்களுக்கு கொடுத்த பணம் திரும்பிப் பெறப்பட வேண்டும்.

இதற்குள் இன்னும் 5 வருடம் அரசியல் செய்ய மக்களிடம் வாக்கு கேட்கிறார். இவர் எதை வைத்து வாக்கு கேட்கிறார் என எனக்கு தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 5 வருடத்தின் பின் , எனக்கு இன்னோரு 5 வருடம் தாருங்கள் என யாரிடமும் போய் கேட்க மாட்டேன். என் பணிக்கு மக்கள் தானாகவே என்னை மீண்டும் தேர்வு செய்வார்கள். அப்படியாக நான் உங்களுக்காக சேவை செய்வேன்.

நாங்கள் எத்தனையோ மக்களை இழந்திருக்கிறோம். போராளிகளையும் இழந்திருக்கிறோம். என் சொந்த உறவுகளையும் இந்த போராட்டத்தில் இழந்திருக்கிறேன். அதன் வலி எனக்கு தெரியும். இந்த போராட்டத்தை கொச்சப்படுத்துவதென்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கொச்சப்படுத்துவதாகும். விக்ணேஸ்வரனுக்கும் எம் மக்களுக்கும் பெரிதான தொடர்பு இல்லை. கொழும்பிலிருந்து வந்து எம் மக்களை அவர் கொச்சப்படுத்துவதை கடைசிவரை ஏற்க முடியாது. எனது சவால்களுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரதான வேட்பாளரும் அமைப்பாளருமான வேலாயுதம் கணேஸ்வரன் முன்னாள் முதலமைச்சரது பேச்சை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார்.

– அஜயன்

Comments are closed.