சு.கவின் நீல நிறத்தை வேறு கட்சிகள் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துக : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீல நிறத்தை வேறு கட்சிகள் பாவிப்பதைத் தடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் கட்சியின் நிறம் நீல நிறம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், கட்சியின் யாப்பு அங்கீகரிக்கப்பட்ட காலம்தொட்டு அதன் முதலாவது பந்தியில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. யாப்பின் முதலாவது பந்தியில், கட்சியின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றும், கட்சியின் தேர்தல் சின்னம் கை என்றும், கட்சியின் நிறம் நீல நிறம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எமது கட்சியின் யாப்பின் பிரதி ஒன்றை இதற்கு முன்னர் உங்களுக்கு அனுப்பியுள்ளோம்.

எனினும், இடம்பெறும் தேர்தல் பிரசாரங்களின்போது வேறு சில அரசியல் கட்சிகளினால், தங்கள் கட்சியின் நிறம், நீல நிறம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி நீல நிறத்தைப் பாவிப்பதாக தேர்தல் மேடைகளில் அறிவித்திருக்கின்றது. இது தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்கள் ஊடாக பிரசாரமாகி இருந்தது.

இந்த நடவடிக்கையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால அடையாளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும். அண்மையில் உருவாக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளினால் வேறு அரசியல் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் நிறத்தை அறிவித்திருக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நீண்டகால வரலாறு இருப்பதுடன் அதன் நிறம் நீலம் என்றும் முழு நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதனால் அதன் உரிமையை வேறு கட்சிகளுக்குப் பயன்படுத்துவதற்கு இடமளிப்பது மக்களின் ஜனநாயக ரீதியில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு இருக்கும் உரிமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறமான நீல நிறத்தை வேறு அரசியல் கட்சியினால் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காே – தடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Comments are closed.