மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நாட்டிலிருந்து கொரோனாவை விரட்டலாம் : பவித்ரா வன்னியாராச்சி

“மக்கள் எமக்கான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து நாம் மீண்டுவர முடியும்.”

– இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

“கொரோனா இன்று உலகளாவிய ரீதியான சவாலாக காணப் படுகிறது. எனினும், இதனை எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கந்தக்காடு போதைப்பொருள் தடுப்பு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான 700 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் 443 கைதிகளும், 63 அதிகாரிகளும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேரும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய மொத்தமாக 530 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டரை மாதங்களாக நாட்டில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படாமைக்கு மக்களின் ஒத்துழைப்பு தான் பிரதான காரணமாகும். மக்களுக்கு நாம் மிகவும் கௌரவமளிக்கிறோம். நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைவரும் சுகாதார ஆலோசனைகளை கடைபிடித்தனர்.

இதனூடாகவே சமூகத் தொற்றாக இந்த வைரஸ் பரவல் காணப்படவில்லை. இப்போது கந்தக்காடு போதைப்பொருள் தடுப்பு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக இந்த விடயத்தில் சற்று பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வேளையில் நாம் மக்களிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். அதாவது, கடந்த காலங்களில் எமக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதேபோல் இனியும் செயற்ட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Comments are closed.