உரிமைக்கான தமிழர் குரலை எவராலும் அடக்கவே முடியாது – மஹிந்த அணிக்கு சம்பந்தன் சாட்டையடி

தமிழர் உரிமைகளுக்கான எங்கள் குரலை எவராலும் அடக்கவே முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘சமஷ்டியைக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு. தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த விமர்சனங்கள் தொடர்பில் சம்பந்தன் பதிலளிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். தமிழர் உரிமைகளுக்கான எங்கள் குரலை எவராலும் அடக்கவே முடியாது. எங்களை எவரும் அடிபணிய வைக்கவும் முடியாது. இதை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிளவுபடாத – ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி முறைமையிலான அர்த்தபுஷ்டியான தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதை அரசு வழங்கியே தீரவேண்டும்.

நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் விஷமத்தனமான கருத்துக்களை அரசு வெளியிட்டால் அதற்கான உரிய பதிலடிகளை எங்களால் வழங்க முடியும்.

அரசுடன் முரண்பாட்டை வளர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தமிழர் உரிமைசார் விடயங்களில் – அரசியல் தீர்வு விடயங்களில் அரசுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகின்றோம். ஆனால், அரசுதான் உரிமை விடயத்திலும், தீர்வு விடயத்திலும் வரையறை போடுகின்றது.

இன நல்லிணக்கத்துக்கு – மத நல்லிணக்கத்துக்கு – ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான தீர்வையே தமிழர்கள் கேட்கின்றார்கள். அந்தத் தீர்வை வழங்குவது அரசின் கடமையாகும்.

அரச தரப்பினர் கூறுவது போன்று தமிழர்களை முட்டாள்களாக்குவதோ அல்லது சிங்களவர்களை முட்டாள்களாக்குவதோ எங்கள் நோக்கம் இல்லை.

சர்வதேசம் தமிழர்களின் பக்கம் நிற்கின்றது என்பதை நாங்கள் சொல்லித்தான் அரசு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. 44 நாடுகளின் இணை அனுசரணையுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான ஐ.நாவின் தீர்மானங்களே இதற்குச் சிறந்த உதாரணம்.

தமிழர்களின் உரிமைகளையும் அரசியல் தீர்வையும் வென்றெடுப்பதற்காக நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று ஜனநாயக வழியில் போராடி வருகின்றோம். உரிமைகளும் தீர்வும் கிடைக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும்” – என்றார்.

Comments are closed.