வவுனியாவில் 5 சபைகளுக்கு 1731 பேர் போட்டி – 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில்…

வவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் ஒரு மாநகர சபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக 103 பேர் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர். இதற்காக 1731 பேர் போட்டியிடவுள்ளனர். ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 154 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுளனர். 1307 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.” – என்றார்.