வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை – இப்படி அநுர அரசு கூறுகின்றது.

“தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது. மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை.”
இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல்போயிருந்த நிலையில் மீண்டும் கிடைப்பவருக்கே வீடுகளில் கூடுதலாக கவனிப்பு இருக்கும். ஏனெனில் அவர்கள் பட்ட கஷ்டம், வலி பெரும் வேதனைமிக்கதாக இருந்திருக்கும்.
வடக்கு என்பதும் இலங்கைக்குக் கிடைக்காமல் இருந்த பிள்ளைதான். தற்போது அந்தப் பிள்ளை நாட்டுக்குக் கிடைத்துள்ளது. போரால் வடக்கு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
எனவே, தேசிய நல்லிணக்கத்துக்காக மட்டும் அல்ல அபிவிருத்திக்காகவும் எம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வோம்.
இதனை நாம் வாக்குகளுக்காக செய்யவில்லை. நாம் சேவை செய்தால் வாக்கு என்பது தாமாகவே கிடைக்கும். எனவே, உண்மையாகவே சேவையாற்றுகின்றோம்.
வடக்கு மாகாணத்தில் மன்னாரில் எமக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. வவுனியாவிலும் வெற்றி கிடைத்துள்ளது. வடக்கில் 150 உள்ளூராட்சி உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் அவ்வாறு இருக்கவில்லை. கிழக்கிலும் 216 உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர்.” – என்றார்.