புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சி: குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேர் நேற்று விடுதலை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 16 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றனர் என்றும், 2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்களைச் சேகரித்தனர் என்றும் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரால் இவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், பிரதிவாதிகளின் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்ற, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மேற்படி 16 பேரையும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் குற்றப்பத்திரம் நடைமுறையில் இருந்தாலும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லை என்ற அடிப்படையில், மேற்படி 16 பேரும் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலேயே குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வழக்கை விசாரிக்க முடியாது என்ற பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்தை ஏற்ற நீதிபதி, மேற்படி 16 பேரையும் விடுதலை செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.