செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள் – இதுவரை 147 அடையாளம்; இன்றுடன் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 32ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 147 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளில் இருந்து 133 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினத்தோடு அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 14 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் ஸ்கான் அறிக்கை மற்றும் மண் பரிசோதனை அறிக்கை என்பவை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.