கைவிலங்குடன் தப்பிச் சென்ற சந்தேகநபர் வசமாக மாட்டினார் – அவருக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் நண்பனும் கைது.
கைவிலங்குடன் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் கைவிலங்குடன் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.
வத்தேகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் சோதனை நடவடிக்கையில் தப்பிச் சென்ற சந்தேகநபர் கண்டி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபர் தனது கைகளில் இருந்த கைவிலங்கைத் தனது நண்பனின் உதவியுடன் நீக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபருக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் அவரது நண்பனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
