தேசிய QR கொடுப்பனவு புரட்சி ஆரம்பம் – 5,000 ரூபா வரையான பரிமாற்றங்களுக்குச் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்.

இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டத்தின் கீழ், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்குடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

1. வர்த்தகர்களுக்கான சலுகை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபா வரையான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை எவ்வித மேலதிக செலவுமின்றி மேற்கொள்ள முடியும்.

2. நபர்களுக்கு இடையிலான (P to P) பரிமாற்றம்

புதிய முறைமையின் ஊடாக எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் ஒரு நபரிலிருந்து இன்னொரு நபருக்கு மிக எளிதாகப் பணத்தைப் பரிமாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உரை

“எமது பொருளாதாரத் தரவுகளை வெளிப்படைத்தன்மையுடன் திரட்டத் தவறியதே நாம் தேங்கி நிற்பதற்குக் காரணமாகும். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியும். இது ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான முறைமையை உருவாக்கும்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எரிபொருள் மானியம் போன்ற சலுகைகளைத் தகுதியான மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்ப்பதில் எமக்குச் சவால்கள் உள்ளன. உதாரணமாக, டீசல் மானியம் வழங்கும் போது பெரிய சொகுசு வாகனங்கள் அதிக நன்மையைப் பெறுகின்றன. ஆனால், டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைமை ஊடாக ஒருவரின் பொருளாதார நிலையைத் துல்லியமாக அறிய முடியும். அதன் அடிப்படையில் மானியங்களை உரிய இலக்குகளுக்கு வழங்க முடியும்” என்றும் அவர் விளக்கமளித்தார்.

“பழைய காகித வங்கிப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மக்கள் மாற வேண்டும். குறிப்பாக வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பணப்பரிமாற்றங்களை QR முறைமைக்கு மாற்றும் வகையில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இது ஒரு சமூகக் கலாசாரமாக மாற வேண்டும்” என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.