இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி! – விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை பார்க்கின்றார் என விசனம்.

https://we.tl/t-U0TcqONZS7K3FWdK

இலங்கை கராத்தே சங்கத்தில் இடம்பெற்று வரும் பெருமளவிலான பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜப்பானிய கராத்தே தோ ஹகுஅகாய் அமைப்பின் முதன்மை ஆலோசகர் கசுன் விஜேகோன், ஊழல்களை விசாரிப்பதற்காகக் கடந்த 2025 ஓகஸ்ட் மாதத்தில் கலைக்கப்பட்ட கராத்தே சங்கத்திற்கு, இந்த ஆண்டு பெப்ரவரியில் தம்மிக கஸ்தூரிமுத்தலி என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

“புதிய தலைவர் பொறுப்பேற்றது முதல் மற்ற உறுப்பினர்களை மதிக்காமல் தனிச்சதிகாரப் போக்கோடு செயற்பட்டு வருகின்றார். அத்துடன், கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே மீண்டும் பதவிகளை வழங்கி வருகின்றார்.

ஆசிய கராத்தே போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் தகுதியற்றவர்களாவர். இணையதளத்தில் வெளியிடப்படாத போலிச் சுற்றறிக்கைகள் மூலம், அரசு நிதியுதவியுடன் இப்போட்டிகள் நடைபெறவுள்ளதாகப் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் போட்டிக்கு அனுப்ப முன்வந்த பின்னர், ‘அரசு நிதி கிடையாது, சொந்த செலவிலேயே செல்ல வேண்டும்’ எனச் சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.

இப்போட்டிக்குச் செல்லும் ஒரு பிள்ளையிடம் சுமார் 5 இலட்சம் ரூபா வரை வசூலிக்கப்படுவதுடன், இதன் மூலம் பல கோடி ரூபா முறைகேடு நடந்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்குத் துணைபோகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், நாட்டின் தலைவர் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும்.” – என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய கராத்தே சங்க உறுப்பினர் அதுல ஜயசிங்க, “விளையாட்டுத்துறை அமைச்சரையும் மீறித் தற்போதைய தலைவர் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றார். சங்கத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி, சட்டவிரோதமாகப் பணத்தைச் சுருட்ட ஒரு கும்பல் தலைவரைத் தவறான வழிக்கு இட்டுச் சென்றுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுத்துறைச் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயற்படும் இந்த ஊழல் கும்பலிடமிருந்து கராத்தே சங்கத்தைக் காப்பாற்ற, நாட்டின் தலைவரான ஜனாதிபதியே நேரடியாகத் தலையிட்டு தமக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.