நீதிமன்றத்தைக் கைப்பொம்மையாக்க முயன்றால் மாபெரும் மக்கள் புரட்சி இலங்கையில் வெடிக்கும்!
நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில் அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை மறந்துவிட வேண்டாம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களிடமிருந்து அரசுக்கு ஆணை கிடைத்தது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே தவிர, கௌரவ நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்லவெனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தின் மீது நிறைவேற்று அதிகாரம் செல்வாக்குச் செலுத்த முற்படுவது வெட்கக்கேடான செயலாகும் என்றார்.
சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், அதிகாரப் பகிர்வு மற்றும் சமன்பாடுகள் தொடர்பில் ஜனாதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ புரிதல் இல்லாவிட்டால், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அரசின் இந்த ஒருதலைபட்சமான சர்வாதிகாரப் போக்குக்காக நாட்டு மக்கள் கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று எச்சரித்த சஜித் பிரேமதாஸ, இந்தியாவில் அண்மையில் வேலையற்ற இளம் சந்ததியினர் அவமதிக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாற்றங்களை ஏற்படுத்தியதையும் நினைவுகூர்ந்தார்.
அதேபோன்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையின் இளைஞர்களும் சிவில் சமூகமும் ஒன்றுபட்டு மக்கள் பலத்தால் அதனைத் தோற்கடிப்பார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை முடக்கும் சர்வாதிகாரச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அரசை வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், கௌரவ நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு தியாகத்துக்கும் முகம்கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.
