பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தருமபுரி வாலிபர் கைது!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று ஆடி கிருத்திகையையொட்டி பழனி முருகன் கோயிலில் காலை முதல் ஆயிரக்கணக்கானோர் குவிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு வியாழக்கிழமை காலை(ஆக.6) தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் பழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மோப்ப நாய் உதவியுடன் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், பழனி மலைக்கோயில் தேவஸ்தான அலுவலகம், கிரிவலப் பாதை, முடி காணிக்கை செலுத்தும் இடம், இலவச கழிப்பறை, குளியலறை, பக்தர்கள் காத்திருக்கும் மண்படம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். மிரட்டலை தொடர்ந்து கோயில் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்திய பழனி நகர் போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் தருமபுரியை சேர்ந்த முனியப்பன்(24) என்பதும், அவர் திண்டுக்கல் பகுதியில் இருந்து பேசிய தெரியவந்தது.

இதையடுத்து திண்டுக்கல் பகுதியில் நின்றிருந்த அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்ததில், பழனி முருகன் கோயிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்காத கோபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி கிருத்திகையையொட்டி பழனி முருகன் கோயிலில் காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.