போக்சோ வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: மதபோதகருக்கு மரண தண்டனை விதித்தது நெல்லை நீதிமன்றம்!
திருநெல்வேலி: போக்சோ வழக்கில் கிறிஸ்தவ மத போதகருக்கு மரண தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தை குளம் பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான ஆபிரகாம் (50) சிறுமிகளிடம் அத்துமீறியது தெரியவந்தது.
உடனடியாக மத போதகர் ஆபிரகாமை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை வாசித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
