22ஆவது திருத்தத்தை விட மக்களின் தேவைகளே முக்கியம்! – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சுட்டிக்காட்டு.

இலங்கையில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள 22ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதை விட, மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கே அரசு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக அரசால் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது பேசப்பட்டு வரும் இந்த 22ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதை விட மக்களுக்கு ஆற்ற வேண்டிய பல பணிகள் அரசுக்கு உள்ளன. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை முழுமையாகச் செய்து முடித்த பின்னர், இவ்வாறான எந்தவொரு சட்டத் திருத்தத்தையும் கொண்டுவருவதில் ஆட்சேபனை இல்லை.

தற்போது நாட்டிலுள்ள மக்களின் முதன்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவசியமற்ற விடயங்களையே அரசு முன்னெடுத்துச் செல்கின்றது.

உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் இன்றி மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேவையற்ற விடயங்களைச் செய்ய முற்படும்போதே நாட்டில் பல சிக்கல்கள் உருவாகின்றன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.