அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு.

தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களினால் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுத் திசைதடுமாறியுள்ளனர் என்றும், நாளாந்தம் மூன்று வேளை உணவைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பாரிய பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனுராதபுரம், மதவெச்சிய, யகாவெவ பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் காணப்படும் ஒரேயொரு மாற்றுத் தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே விளங்குகின்றது. விவசாய வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள மக்களின் விவசாயத்தை மேம்படுத்தி, கைத்தொழில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, உற்பத்தித் தொழில்களை ஏற்படுத்தி விரைவான அபிவிருத்தியை ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே சாதிக்க முடியும்.

கிராமத்தைக் கட்டியெழுப்பி, நகரங்களை உருவாக்கி, நாட்டை முன்னேற்றும் இந்தப் புதிய வேலைத்திட்டத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.