நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க விளாசல்.

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

மஹரகம பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். இந்தத் திருத்தம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முற்றிலும் சாதகமானதே தவிர எவ்விதத்திலும் பாதகமானதல்ல.

எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள், பலர் பிணையில் உள்ளவர்களுமாவர். கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதனாலேயே இவர்கள் கலக்கமடைந்துள்ளனர். ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர, அது மக்களின் பிரச்சினையல்ல.” – என்றார்.

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்ஷக்களின் காலத்தில்தான் முழுமையாக இல்லாமல் போனது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அவர்கள் முறையற்ற வகையிலேயே பதவி நீக்கம் செய்தனர். அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.” – என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கடுமையாகச் சாடினார்.

Leave A Reply

Your email address will not be published.