உடலுக்குள் மறைத்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 11 பேரும் மறியலில்!
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்துக்குச் செல்வதற்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை கப்பலில் பயணிக்கத் தயாரான 19 பயணிகள் சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர பரிசோதனைகளின் போது, அவர்களில் 11 பேர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மேற்படி 11 பேரும் நேற்று வியாழக்கிழமை மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான், அவர்கள் அனைவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
