நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடல்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
நேபாளத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், இலங்கை அரசின் முழுமையான ஆதரவையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.
நேபாளத்துக்குத் தேவையான குறிப்பிட்ட உதவிகளை அடையாளம் கண்டு வழங்குவதற்காக, இலங்கையின் இடர்முகாமைத்துவ நிலையங்கள் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய நண்பனும் அண்டை நாடுமான நேபாளத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் இலங்கை என்றும் உறுதியாகவும் தோழமையுடனும் இருக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.
