சேருவில மங்கள ராஜமகா விகாரையில் கோலாகலமாக நடைபெற்ற கடலோர வேடர்களின் பாரம்பரியத் தேன் பூஜை!

கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரியத் தேன் பூஜை சேருவில மங்கள ராஜமகா விகாரையில் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடலோர வேடர்களின் தலைவரான நடராஜா கனகரத்தினம் தலைமையிலான பழங்குடியின மக்கள் பக்தி சிரத்தையுடன் எடுத்துவந்த தேன் குடம், சேருவில மங்கள ராஜமகா விகாராதிபதி வணக்கத்திற்குரிய அலுதெனியே சுபோதி நயினாக தேரரிடம் சடங்குபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் மங்கள மகா ஸ்தூபியை வலம் வந்து வழிபட்டதைத் தொடர்ந்து தேன் பூஜை இடம்பெற்றது. இப் பூஜையானது பழங்குடியின மக்களுக்கு இலகுவில் புரியும் வகையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுவதற்காக விகாராதிபதி தேரரால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் நிறைவில், விகாராதிபதி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரீத் நூல் வழங்கி கடலோர வேடர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

சாதி, மதம் மற்றும் மொழி காரணங்களால் சமூகங்களால் ஓரங்கட்டப்பட்ட ஒரு தனித்துவமான குழுவினரான இவர்கள், வெருகல் மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில் உள்ள 27 கிராமங்களில் பரந்து வாழ்கின்றனர்.

சேருவில பெரஹராவில் தங்களின் பாரம்பரிய நடனங்களையும் கலைகளையும் வெளிப்படுத்தும் இவர்கள், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கும் சேருவில விகாராதிபதி தேரருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.