அநுரவின் தலைமைக்கு ஈடுகொடுக்க எதிர்க்கட்சிகளில் எவருமே இல்லை! – பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பெருமிதம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வலுவான தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுத்து அரசியலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகளில் எவரும் இல்லை என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாடு கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டபோது, தைரியமாகப் பொறுப்பேற்று நாட்டை மீட்சிப் பாதையிலும் ஸ்திரத்தன்மையிலும் வழிநடத்தியவர் தற்போதைய ஜனாதிபதி மட்டுமே. அவருக்கு அரசியல் ரீதியாகச் சவால் விடுக்கக்கூடிய தகுதியான தலைவர் எதிர்க்கட்சிகளில் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவர்.

22ஆவது அரசமைப்புத் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. இந்தத் திருத்தம் அரசின் சுயநலத்துக்காகவோ அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காகவோ கொண்டுவரப்படவில்லை. நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்தவுமே இது கொண்டுவரப்பட்டது.

நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்க்கட்சியினர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசு முன்னெடுக்கும் அனைத்துச் சீர்திருத்தங்களும் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையுமே மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.