சகல அதிகாரங்களையும் பெலவத்தை தலைமையகத்துக்குள் முடக்கி சர்வாதிகாரப் பாதையில் செல்ல முற்படுகின்றது ஜே.வி.பி. அரசு!

அவசர அவசரமாக அரசமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை அழித்துச் சர்வாதிகாரப் பாதையில் செல்ல ஜே.வி.பி. அரசு முற்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று எச்சரித்துள்ள நிலையில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்படாத அரசு, அரசமைப்புச் சீர்திருத்தம் மூலம் அனைத்து அதிகாரங்களையும் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்குள் முடக்கி ஏனைய கட்சிகளை அழிக்க முயல்கின்றது.

பொருளாதாரம் சீரடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன. எரிபொருள் விலையைக் குறைப்பதாகக் கூறிவிட்டு இன்று லீற்றருக்கு 100 ரூபாவுக்கும் அதிகமாக அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களைப் பற்றியிருந்த ‘அதிகார போதை’ நோயே இன்று அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசையும் பற்றியுள்ளது.

அமைச்சர்கள் வீதிச் சந்தைகளுக்குச் சென்று மக்களிடம் பேசிப் பார்த்தால் உண்மை நிலை புரியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்ற அரசு, ஜனநாயகத்தின் பிரதான அங்கமான மாகாண சபைத் தேர்தலை நடத்த எந்தவொரு விருப்பமும் இன்றி மக்களை ஏமாற்றி வருகின்றது. மன்னார் எண்ணெய் அகழ்வு போன்ற கதைகளைப் பரப்புவது தேர்தல்களைக் காலந்தாழ்த்தும் ஒரு முயற்சியே.

எது எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி கிராம மட்டத்தில் அமைதியான முறையில் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக மக்களை அணிதிரட்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.