தெலுங்கானா: சாலையில் வீசப்பட்ட கைக்குழந்தை… வளர்க்கத் துடித்த மக்கள்!

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவில் இருந்து ஒரு பொருளை சிலர் சாலையில் தூக்கி வீசினர். உடனே அந்த ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.

அந்த நேரத்தில் சாலையோரம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஆட்டோவில் சென்றவர்கள் அந்த குழந்தையை சால்வை மற்றும் சிறு மெத்தையில் சுற்றி சாலையோரம் வீசிச் சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த சில வாலிபர்கள் கவனித்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா மூலமாக குழந்தையை வீசிச்சென்றது யார் என்று போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதனிடையே குழந்தையை தாங்கள் வளர்த்துக்கொள்வதாகக் கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் குழந்தையை கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்த டாக்டர்கள், இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.