இருவரை சுட்டுப் படுகொலை செய்தது எஸ்.ரி.எப்.! – அதிகாலை அதிர்ந்தது மினுவாங்கொடை.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம், மினுவாங்கொடை பொல்வத்தை, பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஊரகஹ பிரதேசத்தில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்றமை மற்றும் யக்கலமுல்ல பகுதியில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி நான்கு வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரையும் கைதுசெய்ய சென்ற போதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சந்தேகநபர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி மினுவாங்கொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரும், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் தலைவரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ஊரகஹ இந்திக்கவின் பிரதான உதவியாட்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் போத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றும், போர – 12 துப்பாக்கி ஒன்றும், ரம்போ ரக கத்தி ஒன்றும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.