வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை நோக்கி வசைபாடிய தமிழ் பொலிஸ் அதிகாரி.(படம், வீடியோ).

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகின்றார்கள் என்று தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை நோக்கிக் கூறியமையால் தாய்மார் கடும் கோபமடைந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவுக்கு இன்று வருகை தந்த போது வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்களை வவுனியா மாவட்ட செயலகத்தை நோக்கி முன்னேறாமல் பொலிஸார் தடுத்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த தமிழரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைப் பார்த்து “நீங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகின்றீர்கள்” என்று தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், “நீ ஒரு தமிழனாக இருந்து இவ்வாறு தெரிவிப்பது தவறு. உங்களைப் போன்றோரே எமது இனத்தின் துரோகிகள். இராணுவ அறிவித்தலுக்கு இணங்கி பிள்ளைகளையும் கணவனையும் நம்பி ஒப்படைத்து இன்று பறிகொடுத்த எமக்குத்தான் அதன் வலி தெரியும்” என்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நோக்கிக் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.