புலிகளை இனிமேல் வீட்டுக்குள் வைத்து நினைவேந்துங்கள் – கொதித்தெழுகின்றார் வீரசேகர.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வு பகிரங்கமாக நடைபெற்றுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மரணித்த விடுதலைப்புலிகளை அவர்களின் உறவுகள் இனிமேல் வீடுகளுக்குள் வைத்து நினைவேந்த வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“இலங்கையில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். புத்தசாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தேரவாத பௌத்த நாடாக இலங்கை பாதுகாக்கப்படும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (29) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன. இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கின்றார்கள்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு. அரசமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் பௌத்த சாசனம் அமுல்படுத்தப்பட்டது. ஆகவே, பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட்டால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். பௌத்த விகாரைகள், தேரர்கள் மற்றும் பௌத்த மரபுரிமைகள்தான் பௌத்த சாசனம்.

சிங்கள இனத்தவர்கள்தான் பௌத்த சாசனத்தைத் தோற்றுவித்தார்கள். ஆகவே, புத்தசாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் ‘சிங்கலே’ என அழைக்கப்பட்ட இலங்கை காலப்போக்கில் ஸ்ரீ லங்கா என எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை அறியவில்லை. இலங்கையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களில் இருந்துபாதுகாக்க சிங்களவர்கள்தான் முன்னின்று போராடினார்கள்.

புத்தசாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாட்டின் ஒருமைப்பாடு உறுதியாகப் பேணப்பட வேண்டும்.

சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் நாட்டைப் பிளவுபடுத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் புத்தசாசனம் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை. தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புத்தசாசனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை. பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்துக்குச் சென்று “வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை” என்று சொல்கின்றார். இது வெறுக்கத்தக்க கருத்தாகும்.

வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது?

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் உள்ள கோயில்களில் தேர் வீதி வலம் வந்தது. சிங்களவர்களும் அதில் கலந்துக் கொண்டார்கள். அதுவே சிங்கள இனத்தின் பொறுமையாகும். ஆனால், வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்துக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள்.

குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்தவதையிட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வு பகிரங்கமாக நடைபெற்றுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

போரில் மரணித்த விடுதலைப்புலிகளை அவர்களின் உறவுகள் இனிமேல் வீடுகளுக்குள் வைத்து நினைவேந்த வேண்டும். விடுதலைப்புலிகள் மூன்று இலட்சம் தமிழர்களைப் பகடைக்காயாக வைத்து போர் செய்தார்கள்.

இராணுவத்தை நோக்கி தமிழர்கள் வரும் போது அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். இராணுவத்தை நோக்கி 12 வயது சிறுவன் வரும் போது அந்தச் சிறுவனைப் பிடித்துக் கால்களை வெட்டினார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இவ்வாறானவர்களையா தாம் நினைவுகூர வேண்டும் என்பதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் நெருக்கடி செய்தார்களா அல்லது இராணுவத்தினர் நெருக்கடி செய்தார்களா என்பதைத் தமிழ் இளைஞர்கள் தமது பெற்றோரிடம் உண்மைகளைக் கேட்டறிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.