பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியே!

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை விடுத்து குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அதற்கான சிறந்த அணி ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது என்றும், சரியான சிந்தனை, சரியான வேலைத்திட்டம் மற்றும் நிலையான தத்துவம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கூறிய அனைத்துப் பலத்தையும் பயன்படுத்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தான் தயாராக இருக்கின்றார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்தத் தொகுதிக் கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தொகுதி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர ஏற்பாடு செய்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாட்டுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதை குறுகிய காலத்துக்குள் ஐக்கிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்டியுள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஹுஸ்ம (மூச்சு) மற்றும் சக்வல (பிரபஞ்சம்) திட்டங்கள் இதற்குச் சிறந்த உதாரணம் என்றும் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச நீட்டிய கெரட் அல்லது முந்திரி துண்டுகளைச் சாப்பிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாரில்லை என்றும், நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி,பிரதமர் பதவிகளை ஏற்பதற்கு நிபந்தனைகள் விதித்தது நாட்டுக்காகவேயாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முழு நாடுமே “ஹோ ஹோம் கோட்டா” என்று கூறும் போது அதனை அங்கீகரித்து கண்டியில் இருந்து கொழும்பு வரை ஐந்து நாட்களாக “ஹோ ஹோம் கோட்டா” என்ற கோஷத்துடன் பாத யாத்திரை போராட்டம் மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு ராஜபக்சவினருடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.