சிறைகளில் தற்போது 31 அரசியல் கைதிகள் மாத்திரமே! – நீதி அமைச்சர் தகவல்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான பாதீட்டு ஒதுக்கம் குறித்த குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தனர். பின்னர் அந்த எண்ணிக்கை 110 ஆகக் குறைக்கப்பட்டது.

அவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்காக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட மேல் நிதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

இதையடுத்து குறித்த எண்ணிக்கை 60ஆகக் குறைந்தது.

இந்தநிலையில், தற்போது 16 குற்றவாளிகளும் 15 சந்தேகநபர்களும் உள்ளனர்.

குறித்த வழக்குகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” – என்றார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சமர்ப்பித்த கடிதத்தை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்விடம் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நட்டஈடு தொகை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.