நிச்சயதார்த்ததிற்கு முன் பெண்ணை வீடு புகுந்து கடத்திய கும்பல்… சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியில் இருந்த பல் அறுவை சிகிச்சை மருத்துவர் பயின்று வரும் பெண், 50க்கும் மேற்பட்ட கும்பலால் கடத்தப்பட்ட சம்பவத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடிபாட்லா பகுதியில், பல்வேறு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று வீட்டை சூறையாடியதோடு, கடத்தலைத் தடுத்த பெண்ணின் தந்தை உள்ளிட்டவர்களை கடுமையாகத் தாக்கி, பெண்ணைக் கடத்திச் சென்றது. இந்த விடியோ முழுக்க சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பல் அறுவைசிகிச்சை மருத்துவம் பயின்று வரும் 24 வயது பெண், அவரது நிச்சயதார்த்த நாளில், 50க்கும் மேற்பட்ட குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வெள்ளிக்கிழமையன்று மணப்பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த குண்டர்கள், வீட்டிலிருந்த பொருள்களை சூறையாடியதோடு, பெண்ணை கடத்திச் செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள்.

வைஷாலி என்ற அந்தப் பெண்ணை வீட்டுக்குள் இருந்து இழுத்துச் சென்று காரில் தள்ளி கடத்திச் சென்றுள்ளனர். சுமார் 30 நிமிடங்களில் வீட்டை சூறையாடி, 5 பேரை படுகாயமடையச் செய்து, வீட்டிலிருந்து சிசிடிவி காமராக்களையும் அடித்து உடைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையத் தொடங்கி, பெண்ணைத் தேடும் பணியை துரிதப்படுத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற தேர்தல் வேட்டையில், குண்டர்களிடம் சிக்கியிருந்த பெண் மீட்கப்பட்டு விடியோ ஆதாரத்தின் அடிப்படையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், பெண்ணின் முன்னாள் காதலன் நவீன் ரெட்டி தலைமறைவாக இருக்கிறார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.