தினேஷ் ஷாப்டர் விவகாரம்: கொலையாளி யார்? – இதுவரை 140 பேரிடம் துருவல்.

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரபல தமிழ் வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரை 140 பேரிடம் சி.ஐ.டி.யினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். எனினும், கொலையாளி எவரும் இதுவரை சிக்கவில்லை.

அத்துடன், தினேஷ் ஷாப்டரின் மரணம் பதிவாகிய இடத்தில் காணப்பட்ட இரத்த மாதிரிகள் உள்ளிட்ட ஆதாரங்களை மரபணு பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரி, நகங்கள் உள்ளிட்ட உடற்கூறுகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள் தொடர்பில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்துக்கு அருகில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.