இந்த வாரம் யாழ். மாவட்ட அரச அதிபர் நியமனம்? – பலரும் போட்டி.

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் நியமனம் இந்த வாரம் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ். மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன், பதவி உயர்வுடன் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக இடமாற்றலாகிச் சென்றிருந்தார். கடந்த முதலாம் திகதியிலிருந்து மாவட்ட அரச அதிபர் நியமிக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

யாழ். மாவட்ட அரச அதிபர் பதவிக்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.

வடக்கு மாகாண சபையின் மூத்த அதிகாரி ஒருவரை வடக்கு ஆளுநர் பரிந்துரைக்க முயற்சித்துள்ளார். அவரை மதத்தலைவரின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுத் தருமாறு ஆளுநர் அறிவுறுத்தியிருந்த நிலையில், மதத் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை என்று தெரியவருகின்றது.

அதேவேளை, வடக்கு மாகாண ஆளுநரால், முன்னாள் மேலதிக மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் எதிர்ப்பால் அதுவும் கைவிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே யாழ். மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கான நிகழ்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்படாத போதும் இறுதி நேரத்தில் உள்ளடக்கப்படலாம் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.