இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை திறந்த பயணி.. விசாரணைக்கு உத்தரவு..!

சென்னையிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணி ஒருவர் திறந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குநரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்ல இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. விமானத்தில் பயணிகள் வரிசையாக ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவர் தவறுதலாக எமர்ஜென்ஸி கதவுகளைத் திறந்ததாகக் கூறப்படுகிறது. இதனை உடனடியாக கவனித்த விமான சிப்பந்திகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவசரகால கதவு சரியாக பொருத்தப்பட்டது. விமானத்தின் அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து எஞ்சினீயரிங் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகே விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இதனால் விமானம் சுமார் 42 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட இண்டிகோ நிறுவனம், எமெர்ஜென்சி கதவுகளைத் திறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பயணி தங்களிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என விசாரித்து விசாரணை அறிக்கை சமர்பிக்கும்படி விமான கட்டுப்பாட்டு இயக்குநரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. விமானப் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப்படவில்லை எனவும் அது கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.