இ.தொ.காவிடம் ஜெய்சங்கர் வழங்கிய உறுதிமொழி என்ன?

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இதனால் மலையக மக்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்காகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும்” என்றும் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இவ்விரண்டு கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், இ.தொ.காவின் சட்ட பிரிவு பொறுப்பாளர் மாரிமுத்து, இ.தொ.காவின் ஆலோசகர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பொருளாதார சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்தும், தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.