ராஜபக்சக்கள் சூறையாடியதை ஈடுகட்டவே மக்கள் மீது வரி விதிப்பு! – சஜித் குற்றச்சாட்டு.

தற்போதைய அரசு சாதாரண மக்கள் மீதும் வரிகளைச் சுமத்தி, ராஜபக்சக்கள் திருடிய பணத்தை அறவிட்டுக்கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.
³
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும், தொலைநோக்குப் பார்வையும் தேவைப்பட்டாலும் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசு வரிக்கு மேல் வரி விதிக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதாகவே இதற்கு அவர்கள் காரணம் கூறுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தைக் கையாள்வது என்பது சாதாரண மக்களுக்குக் குறைந்த அழுத்தத்தைக் கொடுப்பதானதாக இருந்தாலும், தற்போதைய அரசு சாதாரண மக்கள் மீதும் வரிகளைச் சுமத்தி, ராஜபக்சக்கள் திருடிய பணத்தை அறவிட்டுக்கொண்டிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டு மக்கள் மீது எந்த அழுத்தமும் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தை கையாளுமாறே 220 இலட்சம் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதைய ஜனாதிபதியும் ஏனையோரும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு நடனமாடிக்கொண்டிருகின்றனர்.

விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்களின் துன்பங்களைப் புரிந்து கொள்ளும் பிரேமதாஸ சகாப்தத்தை உருவாக்குவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.