பசுமை எரிசக்தி பொருளாதாரத்திற்கு நாடு திரும்ப வேண்டும்… ஜனாதிபதி வலியுறுத்தல்…

பசுமை எரிசக்தி பொருளாதாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் அடித்தளத்தை உருவாக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வோல்டா ஆட்டோ தொழில்நுட்ப பொறியியல் நிறுவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வோல்டா ஆட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனம் நேற்று முதல் அசெம்பிள் டிராக்டர்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை வாங்குவதற்கு வசதி செய்துள்ளது.

திறப்பு விழாவின் பின்னர், தொழிற்சாலையை பார்வையிட வந்த ஜனாதிபதி, துவிச்சக்கர வண்டிகள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் அசெம்பிள் செயற்பாட்டின் செயற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:

வோல்டா நிறுவனத்தின் திறமைகளை பார்க்க வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களுக்கு அரசு அளிக்கும் ஆதரவை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பசுமை எரிசக்தி பொருளாதாரத்தை உருவாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பசுமை எரிசக்தி பொருளாதாரத்திற்கு மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். இப்போது உலக நாடுகள் பசுமை எரிசக்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்றன. இலங்கை என்ற வகையில் நாமும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த ஐந்தாண்டுகளில், பசுமை எரிசக்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதன் மூலம் பல நன்மைகளை அடைய இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு, தனித்து நிற்கும் இத்தகைய முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் நாட்டுக்குத் தேவை. எனவே, இந்த தொழிலை தொடங்கியுள்ள ஜெகத் மாக்கவிட்டயை வாழ்த்துகிறேன் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.