கோவை கார் குண்டு வெடிப்பு… வெளிவந்த புதுத் தகவல்..!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரி கோவில் முன்பு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜமீஷா மொபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில், ஜமீஷா மோபின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பிப்ரவரி 2022 இல் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் சதித்திட்டக் கூட்டங்களை நடத்தியது தெரியவந்தது. உமர் பாரூக், முபீன், முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோருடன் இணைந்து பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது.

இதே போல் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு பம்ப்வெல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், குக்கர் குண்டை எடுத்து வந்த தீவிரவாதி முகமது ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்ற அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை தீவிரப் படுத்தியது.

கடந்த இரு வாரங்களுக்கு முன், கேரளா, தமிழகம், கர்நாடகா உட்பட, 60 இடங்களில், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களும் என்ஐஏவால் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இதுவரை, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்காமல் இருந்து வந்தன. தற்போது குரோசான் மாகாண ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ், பயங்கரவாத அமைப்பின் ஊதுகுழலாக செயல்படும், ‘வாய்ஸ் ஆப் குரசான்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.