காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பொலிஸார் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை – எழுந்த குற்றச்சாட்டுக்குப் விளக்கத்துடன் பதில்.

போராட்டக்காரர்களைக் கலைக்கும் போது, தாம் காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

பொதுவாக, திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கண்ணீர்ப்புகைக்குண்டுகள் பெறப்படுகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எதிர்ப்பாளர்களைக் கலைக்கப் பொலிஸார் காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என்று சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனினும், எந்தவொரு கண்ணீர்ப்புகைக் குண்டு தயாரிப்புக் காலாவதியானாலும், அது சிறந்த முடிவுகளைத் தராது. காலாவதித் திகதிக்குப் பின்னர் எரிவாயு உரிய வகையில் இயங்காது. எனவே, அதனைப் பயன்படுத்துவதால் பயன் இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொலிஸ் கலகக் குழுவின் அதிகாரிகளின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளே போராட்டக்காரர்களைக் கலைக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த வாரத்தில் கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதல் காரணமாகவே எதிர்ப்பாளர்கள் மூன்று பேர் இறந்தனர் என்று தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த பொலிஸ் பேச்சாளர், மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்பதால், இது குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.