கடைசி டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்காளதேசம்.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

முதல் இரண்டு போட்டிகளில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இன்று மூன்றாவது ஆட்டம் நடைபெற்றது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் லித்தன் தாஸ் 57 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். நஜ்முல் உசைன் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டேவிட் மலன் 53 ரன்களும், கேப்டன் பட்லர் 40 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

அத்துடன் டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லித்தன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக நஜ்முல் உசைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.