வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ் இரட்டை சதம்- நியூசிலாந்து அணி 580 ரன்கள் குவித்து டிக்ளேர்.

நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இலங்கை கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர் டாம் லாதம் 21 ரன்னில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அரைசதம் எடுத்தார். 78 ரன்கள் எடுத்த அவர் ஆட்டம் இழந்தார். 48 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து இருந்தது.

அப்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதே நிலை நீடித்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் 48 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. வில்லியம்சன் 26 ரன்னுடனும் ஹென்றி நிக்கோல்ஸ் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினர். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்தின் ரன் வேகம் அதிகரித்தது. முதலில் சதம் அடித்த வில்லியம்சன் அதை இரட்டை சதமாக மாற்றினார். அவர் 215 ரன்னில் (296 பந்து 23 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார் 94-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு 28-வது சதமாகும்.

வில்லியம்சன்-நிக்கோலஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 363 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் வந்த டேரிஸ் மிட்செல் 17 ரன்னில் ஆட்ட மிழந்தார். ஹென்றி நிக்கோல்சும் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 9-வது சதம் (54 டெஸ்ட்) ஆகும். நியூசிலாந்து 123 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

நிக்கோல்ஸ் 200 ரன்னுடனும் டாம் புளுன்டெல் 17 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை விளையாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழந்து 26 ரன்கள் எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.